Tuesday, October 27, 2009

நல்லவர்களுக்கு துன்பம் ஏற்படுவது ஏன்?

வினா: சுவாமிஜி, நல்லவர்களுக்கு துன்பம் ஏற்படுவது ஏன் ?

மகரிஷியின் விடை:

பரிணாமத் தொடர்ச்சியான மனிதகுலம் கூட்டமைப்பில் தான் வாழ முடியும். ஒரு நாளைக்கு நாம் உண்ணுகிற உணவில், எத்தனை பேருடைய எண்ணம், உழைப்பு, உழைக்கும் போது உடல்படும் துன்பத்தில் ஏற்படும் வருத்த அலைகள் இவை அனைத்தும் சேர்ந்த வினைப்பதிவுகளோடு தான் பெறுகிறோம்.

சமுதாயத்தில் ஏற்படும் வினைப்பதிவுகளை நாம் ஒவ்வொரு நாளும் பங்கிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அது செயலுக்கு வராது இருக்க இதுவரை என்னென்ன முயற்சிகள் எடுத்தோம் ? அதைச் சமன் செய்யது(Neutralise) உணவை எடுத்துக் கொள்கிற போது அதன் பதிவுகள் எல்லாம் போய்விட வேண்டும். அந்த அளவுக்கு தன்னில் தானாகி தான் வாழ்வது என்ற நிலைக்கு மனிதன் வந்தால் அப்பதிவுகளைக் கூட தவிர்க்கலாம்.

இறைநிலை எங்கும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கிறது. மனிதனின் மனத்தின் ஆழத்திலும் அதுவே இருக்கிறது. மனத்தால் நினைப்பது அங்கு பதிவாகிறது. அது தான் செயல். காலத்தால் அங்கேயே விளைவு வருகிறது. அதை மாற்றிக் கொள்ள மனிதன் எப்பொழுதும் நல்லதையே நினைக்கப் பழக வேண்டும். எந்த நேரத்திலும் பொறாமை கூடாது.

ஒரு மனிதன் மற்றொருவனுக்கு தீங்கு செய்ய நினைக்கிறான். நினைப்பவன் கருமையத்தில் அதுவே பதிவாகி அவனைக் கெடுத்த பிறகுதான் அது வெளிவரும். புறப்படுகிற இடத்தில் எழும் தீய எண்ணம் அதுவாக அங்கேயே மாறித்தான் பிறகு பிறரைத் தாக்குகின்றது.

இந்த அளவுக்கு மக்களுக்கு அறிவறியும் தன்மை வேண்டும். இதை வைத்துத் தான் மனிதனுக்கு மனம்+இதன் என்று பெயர் வைத்தார்கள். மனதின் தன்மையை உணர்ந்து அதை இதமாக வைத்துக் கொள்ளக் கூடியவன் தான் மனிதன்.

No comments:

Post a Comment