Friday, October 18, 2013

சுத்தவெளிக்கு அப்பால் ஏதாகிலும் உண்டா?

வினா: சுவாமிஜி, இறைவெளி என்பது சுத்தவெளி என்கிறீர்கள். இறைவெளி தான் சுத்தவெளி என்பதை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? அதற்கு மேல் ஏதாவது உண்டா?

வேதாத்திரி மகரிஷியின் விடை:

எல்லாம் வல்ல இறையே தான் மனிதனுள் அறிவாயும் உள்ளதால், நானும் அந்நிலையில் நின்று தேடித் தேடிப் பார்த்தேன். இதுவரைக்கும் என் அறிவுக்கு எட்டவில்லை. நமது முன்னோர்கள் நீண்ட காலமாகச் சொல்லி வந்த வேதாந்தங்களிளெல்லாம் கூட பிரபஞ்சத்திற்கு அப்பால் ஒன்றுமில்லை... சுத்தவெளி என்கிறார்கள். அதைத்தான் நானும் சொன்னேன்.

இப்போது இருக்கக்கூடியவர்கள் புதிதாக பிரபஞ்சத்திற்கு அப்பால் ஏதாகிலும் கண்டுபிடித்தால் எனக்கும் சொல்லுங்கள்.

Wednesday, October 16, 2013

தனித்திரு, பசித்திரு, விழித்திரு

வினா: சுவாமிஜி 'தனித்திரு, பசித்திரு, விழித்திரு' என்ற சொற்களுக்கு விளக்கம் என்ன?

வேதாத்திரி மகரிஷியின் விடை: இவ்வார்த்தைகள் ஆன்மீகப் பயிற்சியில் உள்ளோருக்கு மிக உயர்ந்த கருத்துக்களை விளக்குகின்றன.

1. எந்த வெளிப் பொருளையும், நிகழ்ச்சியையும் அறிவு நாடாமல், உன்னையே நோக்கி அது நிற்க வேண்டும் என்ற குறிப்பு 'தனித்திரு' என்பது.

உன் மூலம் நாடி அறிவு நிற்பது, உன்னில் ஒடுங்கி நிற்பது; எங்கும் நிறைந்த பூரணமான அரூபநிலையில் நிற்பது என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

2. உன் மகத்துவத்தை அறிந்து கொள்வதில் வேட்கை கொண்டிரு என்பதே 'பசித்திரு' என்பதாகும்.

"நான் யார்... அறிவா? உயிரா? உடலா? இம்மூன்றும் வேறு வேறா... ஒன்றா? இவற்றின் மூலமும் முடிவும் யாது? " என்பது போன்ற விளக்கங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வத்தோடு இரு என்பதை 'பசித்திரு' என்னும் வார்த்தை உணர்த்துகின்றது.

3. பழைய ஞாபகங்களும், பிறர் விருப்பங்களும் உன் அறிவில் அடிக்கடி பிரதிபலிப்பதால், உன் சிந்தனை அடிக்கடி திசை மாற்றம் அடையக் கூடும். அதனால் ஆன்மீகத் துறைக்கு முரணாக நீ செயலில் ஈடுபட நேரிடக் கூடும்.

ஆகையால் நீ மிகவும் உஷாராக, உன் நிலையில் மாறுபாடு அடையாமல் 'விழிப்பாய் இரு' என்று வலியுறுத்திக் கூறுவதே 'விழித்திரு' என்ற வார்த்தையாகும்.  

சித்தி

வினா: மகரிஷி அவர்களே, நம் நாட்டில் பல மகான்கள் அவ்வப்பொழுது சித்தியடைந்துள்ளனர். அவர்கள் உபதேசத்தால் ஈர்க்கப்பட்டு பலர் பக்தர்கள் ஆனார்கள். ஆனால் தாங்கள் மட்டும் மனவளக்கலைப் பயிற்சியைப் பின்பற்றினால் எல்லோரும் தங்களைப் போல் உயர் நிலைப் பேற்றை அடையலாம் என்று கூறுகிறீர்கள், அது எவ்வாறு சாத்தியம்?

வேதாத்திரி மகரிஷியின் விடை: பல மகான்கள் உலகில் சித்தியடைந்தர்கள் என்று கூறுகிறீர்கள். மேலும் என்னைக் குறிப்பிட்டு 'உங்களைப் போல் மற்றவர்களும் உயர்நிலை பெறுவது சாத்தியமில்லை' என்று கூறுகிறீர்கள்.

நீங்கள் எந்த நிலையை, எந்தப் பேற்றினை சித்தி என்று கருதுகிறீர்கள்...

வேடமிட்ட சந்நியாசிக் கோலத்தையா ?

ஏதேனும் ஜால வித்தையில் தேர்ச்சிப் பெற்று பிறர் வியப்புறச் செய்யும் திறமையையா ? 

இனிக்கப் பேசி சொற்பொழிவாற்றும் தெளிவையா ?

நாடு எங்கும் மக்கள் வாங்கிப் படிக்கும் அளவுக்கு நூல்கள் எழுதிப் புகழ் பெறுவதையா ?

ஒரு மனிதன் அருட்பேறு பெற்றதை உங்கள் கண்ணாலோ, கருத்தாலோ காண முடியுமா... எந்தக் கோணத்தில் எந்த நிலையிலிருந்து கொண்டு நீங்கள் பிறர் உயர்வைக் கணிக்கிறீர்கள் ?

நீங்கள் ஒரு பெரிய ஞானி என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவர் பல பழிச்செயல்கள் கொண்டவராக, நடிப்பில் வல்லவராக இருக்கலாம்.

உங்கள் தயவில் வேலை செய்யும் ஒரு கூலியாள் பழிச்செயல் நீங்கி உய்வு பெற்ற ஒரு மகானாக இருக்கலாம்.

ஒருவரைப்பற்றிக் கணிக்க நீங்கள் உங்கள் தெளிவையே அளவு கோலாகக் கொள்ள வேண்டும். அதற்கு முன் ஒருவர் சித்தி பெற்றவர் என்று கருதினால் அது தப்புக் கணக்கேயாகும். மருட்சியால் கொண்ட முடிவாகும்.

மனிதன் புலன்வழியே இன்ப துன்ப நுகர்ச்சியில் மயங்கி உணர்ச்சி வயப்பட்ட நிலையில் மனம் அடையும் பொருத்தா நிலைகள் ஆறுகுணங்களாகும். அவை பேராசை, சினம், கடும் பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலியவையாகும்.

மனதிற்கு மூலமான உயிராற்றலை உணர்தலாகப் பெறும் குண்டலினி யோகத்தால் மனம் ஒடுங்கி தன் மூலத்தில் நிலைபெறுகிறது. அப்போது உணர்ச்சி நிலையல் எழும் ஆறுகுணங்களைப் பற்றியும், அவை இயங்கும் நிலைகளைப் பற்றியும், அகநோக்குப் பயிற்சி என்ற சாதனையால் உணர்ந்து சீரமைப்புப் பெறலாம்.

முறையாகப் பயின்ற பலர் இப்பயிற்சியில் வெற்றி பெற்று அமைதியின் பெருமையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

"நான் கண்டு கொண்டேன்; நாராயண எனும் நாமம்"

கேள்வி: சுவாமிஜி, "நான் கண்டு கொண்டேன்; நாராயண எனும் நாமம்" என்று பெரியவர்கள் கூறுகிறார்களே, அதன் உட்பொருள் என்ன?

வேதாத்திரி மகரிஷியின் விடை: இறைநிலை என்ற பிரம்மமே எழுச்சி பெற்று சுழச்சி நிலையில் விண் என்ற நுண்துகளானது. விண்துகள்கள் மோதி இணைந்து, இயங்குகின்ற தன்மைக்கு ஏற்ப மூலகங்கள் தோன்றின.

விண்ணின் அடர்த்தி நிலையே காற்று. அவ்வடர்த்தி வேறுபாட்டில் தோன்றும் ஹைட்ரஜன் வாயுவோடு ஆக்ஸிஜன் வாயுவும் சேரும் போது நீர்மப் பொருள் தோன்றுகிறது. அந்நிலைக்கு அடுத்த கெட்டிப் பொருளாக உள்ள எல்லாப் பொருளும், உயிர்களும், நீர்மப் பொருளில் இருந்து தான் தோன்றின. நீர்மப் பொருளின் சுழற்சி வேகம் மேலும் குறைந்து நெருங்கி இயங்க திடப்பொருளாக மாறுகிறது.

மண்ணில் ஒரு தாவர விதையைப் போட்டு அதற்குத் தண்ணீர் ஊற்றுகிறோம். அந்தத் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் அணு, அந்த விதையில் அமைத்துள்ள நுண் பதிவுக்கேட்ப சுழற்சி பெற்று, பஞ்சபூதத்தையும் இணைத்து அந்தந்த இரசாயணங்களாக்கி முளை, தண்டு, இலை, கிளை, அரும்பு, மொட்டு, பூ, காய் என்றெல்லாம் மாற்றம் பெறுகிறது. தாவர இனம் ஆக்ஸிஜனைப் பிரித்து மனிதன் சுவாசிக்க உதவுகிறது. அதனால் உயிர்கள் அனைத்தும் நீர்மப் பொருளின் தன்மாற்றத்தாலே தான் தோன்றி வந்தன.

நாரம் + அயனம் = நாராயணம்.
'நாரம்' என்றால் நீர்.
'அயனம்' என்றால் மாற்றம்.

'நாராயணம் என்றால் உயிர்கள் அனைத்தும் நீரின் மாற்றத்தால் தோன்றியது எனப்பொருள்.

திடப் பொருளாக உள்ள அனைத்திற்கும் மூலப் பொருளாக உள்ளது நீர்மப்பொருள் தான். நீருக்கு மூலமாக இருப்பது, எல்லாம் வல்ல இறைவனான 'நீயே தான்'. அவ்வாரன நாரா-அயணமான உன்னை நான் கண்டு கொண்டேன்.

பிரணவப் பொருளான மெய்ப்பொருளின் குணம் மௌனம். அதனால் இறைவனைக் குறிக்க 'அம்' என்ற மகர மெய்யால் அழைத்தார்கள். நானும் 'அதுவாக' - இறைவனாகவே இருக்கிறேன் என்பது தான் "நாம் + அம் = நாமம்".

நமது நெற்றியில் U வடிவில் இரண்டு நரம்புகள் மேல் நோக்கியுள்ளன. அது சிலருக்கு வெளிப்படையாகவே தோன்றும். அந்த நரம்புகளைத் தட்பவெட்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இராமக் கட்டியை இழைத்து அதன் மேல் போட்டு விட்டார்கள். புருவ மையத்தில் இருந்து உயிர் சக்தியை மேலே கொண்டு போய் 'பிரம்மரந்திரம்' என்ற துரிய நிலையில் வைக்க வேண்டும் என்பதைக் காட்ட மையத்தில் சிவப்பு நிறத்தில் மேல் நோக்கி ஒரு கோடு இழுத்து விட்டார்கள். இதைப் புலன்களுக்கு காட்ட அமைத்த சடங்கு முறை நாமமாகும். மொழி வழக்கில் 'நாமம் போட்டான்' என்றால் இன்று வேறு பொருளாகி விட்டது.

எல்லாம் வல்ல இறைவன் எழுச்சி நிலையில் பஞ்சபூதங்களாகி, நீர் வழியே பரிமாண மாற்றம் பெற்று உயிர்களாகத் தோன்றி நாமாகவும் வந்துள்ளான் என்பதை அறிந்த பெரியோர்கள் குறிப்பாக உணர்த்த அவ்வாறு கூறியுள்ளார்கள்.