Tuesday, February 23, 2010

குடும்பம் அமைதி பெற

குடும்பம் அமைதி பெற

இணக்கத்தை வற்புறுத்தும் போதும், பிணக்கத்தை தீர்க்கும் போதும் இன்சொல்லையே உள்ளமும், உதடும் உபயோகப்படுத்த வேண்டும். இன்சொல்லினால் கெடுதல் ஒழிய நன்மைகள் பல பெறலாம்.

குடும்ப அமைதியை பெற சலனமில்லாததும், விசாலமானதுமான மனம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் என்பார்களே அது இங்கே தான் வேண்டும். பொறுமை, சகிப்புத்தன்மை இவை எல்லையின்றித் தேவையாகும். எவ்வளவு பெரிய குழப்பமானாலும் பொறுமை ஒன்றினாலேயே வெற்றி கண்டுவிடலாம்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொருத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல் பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் - அவை சொல்லப்படாதது போல் பாவித்து ஒதுக்கிவிட வேண்டும். அப்போதுதான் அமைதி பிழைக்கும்.

தற்போது அம்மா - மகளுக்கிடையே கூடப் பிணக்குகள் தோன்றுவதையும், வளர்வதையும் பார்க்கிறோம். அவர்களுக்கிடையே கூட விட்டுக் கொடுத்தல் (Adjustment) இல்லையானால் வேறு யாரிடம் அதைத் தேடுவது ? அம்மாவுக்குப் பெண்ணாக இருக்கும் போதே இப்படி என்றால், பின்னால் வாழ்கை எப்படி அமையும் ? அப்புறம் யார் மேல் குற்றம் சொல்வது ?

தன் கருத்துச் சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்கைத் துணை ஒத்துக் கொள்ளவில்லையென்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு - அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரை - தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.