Tuesday, August 4, 2009

இன்றைக்கு தனிமனிதன், குடும்பத்தில் நிம்மதியில்லை

வினா:

இன்றைக்கு தனிமனிதன், குடும்பம், நாடு, உலகத்தில் நிம்மதியில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் சந்தேகம்தான் காரணம். அந்த சந்தேகம் போனால்தான் உலகம் அமைதியாக வாழ முடியும் இல்லையெனில் அமைதியாக வாழ முடியாது. இந்தக் கருத்தை எல்லோர் உள்ளத்திலும் பதியவைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்

மகரிஷியின் விடை:

மனிதனுடைய நிலைக்குத் தகுந்தவாறு அவ்வப்போது சில கருத்துக்கள் வரும். அப்படி ஏற்படக்கூடிய கருத்து எதுவானாலும் சரி நான்கு முகங்கள் உள்ளன.1.தேவையின நீதி (Justification of need)2.தேவையின் அளவு (Justification of Quality)3.தேவையின் தன்மை (Justification of quantity)4.தேவையின் காலம் (Justification of Time) எந்தக் கருத்தானாலும் அது தேவையை உணரக்கூடிய அடிப்படை ஒன்று. எவ்வளவு தேவை என்பது இரண்டு. எது மாதிரியாக அதனை அனுபவிக்க வேண்டுமென்பது மூன்று எப்பொழுது என்பது நான்கு. இந்த நான்கும் சேர்ந்ததுதான் ஒரு கருத்து.

ஒருவருக்கு இருக்கக்கூடிய கருத்து இன்னொருவருக்கு இருக்காது. இந்த நான்கு வகையிலும் கருத்து ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும். அது மனிதனை மனிதன் உணராததனால், என் கருத்துக்கு இசைந்துதான் அவர் நடக்க வேண்டும், என் கருத்தைத் தான் அவர் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு (Ego) தன்முனைப்பு என்பது எல்லோருக்கும் உண்டு. அந்த தன்முனைப்பு எதுவரைக்கும் உண்டு?

தன்னையறியும் வரைக்கும்.தேவைப்படக்கூடிய ஒன்றை அறியாத முன்னம், பொருள்,புகழ்,அதிகாரம்,புலனின்பம் இந்த நான்கிலே சிக்கிக் கொண்டு அங்கு தவிக்கிற பொழுது, அங்கு நான்தான் பெரியவன், எனக்கு வேண்டியதுதான் வேண்டும், நான் விரும்புவதுதான் சரி என்று இந்த நான்கில் இவன் எப்படி நினைக்கிறானோ அதேபோன்று மற்றவர்களும் நினைக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதனால் (Conflict) ஒருவருக்கொருவர் ஒரு பிணக்கு ஏற்படுகிறது. இந்தப் பிணக்குத்தான் இன்று எல்லா சங்கடங்களுக்கும் காரணமே தவிர, சந்தேகம் என்று ஒன்று இல்லை. இருந்தாலும் ஏன் என்றால் இங்குதான் கருத்தொடர் பதிவைப் பற்றி நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.ஒரு மனித உருவம் எங்கிருந்து வந்திருக்க முடியும்? ஐயறிவு இனத்திலிருந்துதான் மனிதன் வடிவம் வந்திருக்க வேண்டும். இயல்பூக்கம் (Mutation) வழியாக வந்திருக்க வேண்டும். மனிதன் தோன்றி இதுநாள் வரையில் இந்தப் பதிவு எங்கிருந்து வந்தது. மனிதனுக்குத் தேவைதானா என்று எண்ணிய ஒரு மனிதன் விடுபட்டான். மற்றவர்கள் அங்கேயே அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால் ஒருவர் வாழ்வை ஒருவர் பறித்துண்ண வேண்டும் என்ற பழக்கமும் அந்த சிந்தனைற்ற செயலும்தான் சந்தேகத்திற்குக் காரணமே தவிர அந்த சந்தேகம் போக வேண்டுமானால் மனிதனுடைய பிறப்பை உணர வேண்டும், பிரபஞ்ச இயக்க நியதிகளை உணர வேண்டும்.

ஞானியர்கள் என்பவர்கள் யார்

வினா:

ஐயா.ஞானியர்கள் என்பவர்கள் யார்?

மகரிஷியின் விடை:

நான் போய்க் கொண்டிருக்கும்பொழுது ஒருவர் வந்து இது நன்றாக இருக்கிறது. எனக்கு வேண்டும் என்று என் மேல் துண்டை இழுக்கிறார். நான் சரி என்று விட்டு விடலாம். எனக்கு அதன் மீது கடும்பற்று என்றால் நான் அதை விட மாட்டேன். அவர் என் கைகளைப் பிடித்துக் கொள்கிறார். நான் பார்ப்பேன். வேறு வழியில்லை. உடனே என் வாயால் அவர் கையை கடித்து விடுவேன். இது சந்தர்ப்பத்தால் வெளிப்படும் செயல். ஆனாலும் கருத்தொடர் மூலம் விலங்கினத்தில் இருந்து வந்ததுதான். அவ்வளவும் உள்ளே அடக்கமாக இருக்கிறது. மனிதர்கள் நல்லவர்களாக இருக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்களிடம் அடங்கியுள்ள பதிவுகள் செயலாக மாற அவர்களுக்குச் சந்தர்ப்பம் இல்லை. அதனால் அப்பதிவுகள் அடங்கி இருக்கிறது என்று அர்த்தம். ஆக எல்லோரிடமும் இருக்கும் பிறர் வளம் பறித்துண்ணும் செயலும், பிறர் உயிரை வருத்தி வாழ்தலும் அடங்கியுள்ளன. இதிலிருந்து மீண்டு வந்தால்தான் மனிதனாக வர முடியும். அத்தகையவர்கள் தான் மெய்ப்பொருள் உணர்ந்த ஞானியர்கள்.