Thursday, July 10, 2014

மனையடி சாஸ்திரம் அவசியம்தானா?

கேள்வி: "சுவாமிஜி, மனையடி சாஸ்திரம் அவசியம்தானா? இதனுடைய தத்துவம் என்ன?"

வேதாத்திரி மகரிஷியின் பதில்: " நான்கு சுவர்களை அமைக்கும்பொழுது அதற்குள் உண்டாகும் காந்தக்களம் மனிதனுக்கு நன்மை செய்வதாக அமைவதோ அல்லது தீமை விளைவிப்பதாக அமைவதோ உண்டு. என்ன நீள, அகல, உயரத்தில் அறை அமைந்தால் அதில் எவ்வாறு காந்தக்களம் அமையும், அந்தக் காந்தக் களத்தில் வாழும் மனிதர்களுக்கு என்னென்ன நன்மை, தீமைகள் எல்லாம் உண்டாகும் என்று கணக்கிட்டு அறிந்து கூறும் கலைதான் மனையடி சாஸ்திரம். அவ்வாறு நன்மை செய்யக்கூடிய ஒரு காந்தக் களத்தை அமைத்து அதில் வாழ்வது சிறப்பானதே".

மனம் அடங்கிய துர்வாசருக்குச் சினம் அடங்காமல் போனது ஏன்?

கேள்வி: சினம் அடங்கிய நிலையிலும் மனம் அடங்கவில்லையே என்பதுபோல, மனம் அடங்கிய நிலையிலும் சினம் அடங்காத நிலைக்குச் சான்றுகள் பல உள்ளன. மனம் அடங்கிய துர்வாசருக்குச் சினம் அடங்காமல் போனது ஏன்?

வேதாத்திரி மகரிஷி: மனிதனுக்குத் தன்முனைப்பு என்று ஒன்று இருக்கிறது. தன்முனைப்பிலே 'தான்' 'தனது' என்ற இரண்டு எழுச்சிகள் உண்டு. 'தான்' என்பது அதிகாரப்பற்று (aggressiveness). 'தனது' என்பது பொருள் பற்று (possessiveness). ஆகவே அந்த அதிகாரப் பற்று என்பது "தனக்கு மேலாக ஒருவர் திகழக் கூடாது, வளரக்கூடாது, உயரக்கூடாது" என்ற எண்ணத்தை உடையது. ஆகையினாலே ஒருவர் உயர்ந்துவிட்டால், ஒருவர் செழித்துவிட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அது அவருடைய நோய். உங்களுக்கு ஏன் அந்தக் கவலை ? அதை விட்டுவிடுங்கள். அந்த நோயை அவரே குணப்படுத்திக்கொள்ள வேண்டியதே தவிர அது நம்மை ஒன்றும் பாதிக்காது. அத்தகைய மனிதர் ஏதேனும் ஒரு பழிச்சொல் சொன்னார், தீங்கு செய்தார் என்றால் அவரை "மனதாரக் காலை, மாலை வாழ்த்துங்கள்". எல்லாம் சரியாகிவிடும்.