Wednesday, October 16, 2013

தனித்திரு, பசித்திரு, விழித்திரு

வினா: சுவாமிஜி 'தனித்திரு, பசித்திரு, விழித்திரு' என்ற சொற்களுக்கு விளக்கம் என்ன?

வேதாத்திரி மகரிஷியின் விடை: இவ்வார்த்தைகள் ஆன்மீகப் பயிற்சியில் உள்ளோருக்கு மிக உயர்ந்த கருத்துக்களை விளக்குகின்றன.

1. எந்த வெளிப் பொருளையும், நிகழ்ச்சியையும் அறிவு நாடாமல், உன்னையே நோக்கி அது நிற்க வேண்டும் என்ற குறிப்பு 'தனித்திரு' என்பது.

உன் மூலம் நாடி அறிவு நிற்பது, உன்னில் ஒடுங்கி நிற்பது; எங்கும் நிறைந்த பூரணமான அரூபநிலையில் நிற்பது என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

2. உன் மகத்துவத்தை அறிந்து கொள்வதில் வேட்கை கொண்டிரு என்பதே 'பசித்திரு' என்பதாகும்.

"நான் யார்... அறிவா? உயிரா? உடலா? இம்மூன்றும் வேறு வேறா... ஒன்றா? இவற்றின் மூலமும் முடிவும் யாது? " என்பது போன்ற விளக்கங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வத்தோடு இரு என்பதை 'பசித்திரு' என்னும் வார்த்தை உணர்த்துகின்றது.

3. பழைய ஞாபகங்களும், பிறர் விருப்பங்களும் உன் அறிவில் அடிக்கடி பிரதிபலிப்பதால், உன் சிந்தனை அடிக்கடி திசை மாற்றம் அடையக் கூடும். அதனால் ஆன்மீகத் துறைக்கு முரணாக நீ செயலில் ஈடுபட நேரிடக் கூடும்.

ஆகையால் நீ மிகவும் உஷாராக, உன் நிலையில் மாறுபாடு அடையாமல் 'விழிப்பாய் இரு' என்று வலியுறுத்திக் கூறுவதே 'விழித்திரு' என்ற வார்த்தையாகும்.  

No comments:

Post a Comment